Friday, April 19, 2013

மல்லிகை
--------------------------
கூந்தல் வெளிகளில்
குடியிருக்கும்
அழகு தேவதை!

உஷ்ணத்தின் காமத்தை
சிகையுறிஞ்சாது தடுக்கும்
பூக் கூடை!

சூரியன் எட்டிப் பார்க்கையில்
சூட்சுமமாய் இதழ் சுருக்கும்
மென் தேகத்தால்!

நறுமணங்களின் ஆட்சேர்ப்பால்
நார் சேர் பூமாலையாய்
தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்!

ஜாஸ்மின் கரு சுமந்தே
ஐவிதழ் வரிகளுக்குள்
ஐக்கியமான ஹைக் கூ!

இரவின் கூடலில்
மோகித்துக் கிடக்கும்
மலர்ச் சிற்பங்கள்!

இம்சைக் காதலில்
மேனி நசிக்கும் வண்டுகளுக்காய்
மகரந்தத் தூது விடும் காதலி!

கொடிப் பந்தலிலே
கொசுவம் சொருவிக் காற்றாடும்
மல்லிகைச் சாமரம்!
- JA-

No comments:

Post a Comment