Friday, April 19, 2013

கிறீஸ் பிசாசே!

உன் தசை கிழிக்கும் புத்தியில்
இனவாதம் எட்டிப் பார்க்கின்றது!

தரித்திரத்தின் சரித்திரம் நீ
அரியாசனம் மிதிக்கின்றாய்
குருதியை உறிஞ்சியபடி!

நீ
கருவறைக் கூடுகளைச் சிதைத்து
உயிரறுக்கும் காட்டேறி !!

நீ
முகமூடிச் சல்லாபத்தில்
முணங்கிக் கிடக்கும் சாத்தானின்
சகபாடி!

நீ
நகங்களில் ஆணி பூட்டி
நடு சாமங்களில் ஊசலாடும்
கேடு கெட்ட நாகம்!

நீ
துப்பாக்கிகளின் ரசனையோடு
அப்பாவிகளில் பீதி நிரப்பும் மர்ம மனிதன்!

நீ
கற்றாளைச் பாலெடுத்து
கல்பெங்கும் விசமூட்டி உயிருறிஞ்சும்
பாதகன்!

நீ
ஆறடிக்குள் ஆன்மாக்களை அடக்கிவிட
வருந்தாத பூதம்!

உன் மயானக் கிடங்குகளை தீமூட்டும்
அக்கினி நட்சத்திரங்கள்
விண் பிளக்கின்றன ....

உன்
அதர்ம மூச்சடக்க இதோ நாம்
ஈமானிய உச்சரிப்புக்களுடன் !


(மீண்டும் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் எனும் செய்தி தந்த உணர்வாக்கம் இது)

No comments:

Post a Comment