Sunday, February 17, 2013

மழைக்காலத்தின் முடிவில் . . .

நிலத்தின் அடியாழத்தில்
ஈரம் படரவிட்டிருந்த மழைக்காலம்

அப்பொழுதுதான் முடிந்துவிட்டிருந்தது
பூக்களின் வாசனை
பரவிக்கிடந்த இரவு நேரத்தில்
எனது படுக்கையில் அவளைத் தேடினேன்

அருகில் காணாத அவளை
நகரத்து வீதிகளில் தேடி பரிதவித்தேன்

இரண்டு பக்கங்களிலும்
உயர்ந்த கட்டடத்தை
அரண்களாகக் கொண்டிருந்த
அகலமான வீதியை

நடந்து கடக்கிறேன்
சாளரங்களின் வழியே
கசிகின்ற ஓசைகளில்
அவளைக் கண்டடைய
முடியவில்லை

கோபுரங்களின் மறைவிடங்களில்
பதுங்கிக் கிடக்கும்
புறாக்களின் சிறகசைப்பில்
அவளைக் காணவில்லை

நீண்டு படிந்திருக்கும்
விளக்குக் கம்பத்தின்
நிழலில் அவளைத் தேடிக்
களைக்கையில் நனைந்திருந்த நிலம்
அவளது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது .


No comments:

Post a Comment