காடு கரை தந்ததை
களிப்புடனே அறுத்திட்டு
போகியன்று கழித்து
சூரியனுக்கு பொங்கலிட்டு
மனம்பொங்க மகிழும் விழா..
மாடு கண்ணு குளிப்பாடி
மஞ்ச குங்குமம் பூசி
மனசார நன்றி சொல்லும்
மகத்தான திருவிழா...
நகரத்துச் சொந்தமெல்லாம்
கிராமம் தேடி நாடி வரும்
தைப்பொங்கல் திருவிழா..
சல்லிக்கட்டு விளையாடு
சிலம்பம் சுத்தி நீயும்
இளவட்டக்கல்லு தூக்குவென
மஞ்சத்தண்ணி ஊத்தியே
ஆசையோடு அத்தபொன்ணு அழைக்க
மவுஸ் பிடிக்கும் கையாலே
மாடு பிடிக்க மாட்டேனென்று
டவுனு மச்சான் பதறி ஓட
உறவுகளை ஒன்றிணைத்து
உள்ளங்களை மகிழவைத்து
மதம் மறந்து சாதி துறந்து
தமிழரென்ற உணர்வு
தழைத்தோங்கச்செய்யும் விழா..
நீட்டமான கரும்பெடுத்து
வட்டமாய் கடித்து துப்பும்
தாத்தாக்கள் மத்தியில்
தோலுரிக்கத்தெம்பின்றி
சாறெடுத்துக்குடிக்கும்
இளந்தாரிகள் கூடும் விழா..
விவசாய நிலமெல்லாம்
விளைநிலமாய் வீடாக
தலைசாய்ந்த நெற்கதிரெல்லாம்
புகைக்கக்கும் ஆலையாக
விஷத்தை பாய்ச்சினாலும்
நாம் வாழ தன் உதிரத்தை
உணவாகத்தரும் நிலமகளுக்கு
நன்றி கூறும் விழா..
உழவன் வாழ்வதாலே
உயிர்கள் வாழுதென்றே
உலகோர்க்குப் பறை சாற்றும் விழா
நம் பொங்கல் விழா
பொங்கட்டும் பொங்கலும்
பெருகட்டும் தைமகளின் பெருமையும்...
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment