Tuesday, July 14, 2015

விபச்சாரர்

விபச்சாரர்
அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெளகீக விஷயங்கள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம்
உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில்
பூரித்துப்போனாள்
"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச்
சொன்னதுகூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு எ ப்படி யிருந்தாலும்
சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்
"திருமணத்தில் சாஸ்திர
சம்பிரதாயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பதுகூட தாத்தா
பாட்டிக்காதத்தான்
எனக்கு துளிகூட
இதிலெல்லாம் நம்பிக்கையில்லை"
என்றார்
அவளுக்கும் இது
சரியெனததான்பட்டது
"திருமணமண்டபம் நல்லதாய்
இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்"
என்றார்
அதுகூட அவளுக்கு
ஏற்கும்படியாகத்தானிருந்தது
சீர்வரிசையில் ஒரு
சிறுகுறையென்று
அவரது ஒன்று விட்ட மாமன்
மண்டபத்தையே
உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும்
இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல்
எனக்காகவேனும்
இதைமட்டும்
செய்துகொடுங்கள்"என்றார்
அவளுக்கும் வேறு
வழியிருப்பதாகத் தெரியவில்லை
கல்யாண அமர்க்களங்களெ ல்லாம்
முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைறயினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்"
எனச் சொல்லக்கூடுமோ எனப்
பயந்தாள்
அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த
முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச்
சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில்
நியூட்டனால் கண்டுபிடிக்க
முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த
பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்
"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய்
பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும்
வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை
போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச்
சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன்
வந்து போனது
அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ?
தவறல்லவா"என்றாள்
தமிழச்சியின் கூற்றும்
சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி
சேர்த்து
விபச்சாரர் எனச்
சொல்லலாமா"என்றாள் இவள்
உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய்
சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்
வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள்
புரியாது
தனது முதல் முத்தத்தில்
அவள் நிலைகுலைந்து போனாள்
என
ஆண்மைக் குரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான்
அந்த "விபச்சாரர்"

No comments:

Post a Comment