அழகான வாழ்க்கை.!!
நதிபேசும் மொழிகேட்டு
ரசித்துக் கொண்டே
……..நெடுந்தூரம் மணற்பரப்பில் நடக்க
வேண்டும் !
புதிராக இருக்கின்ற எதுவும்
எந்தன்
……..பார்வையிலே பதில்சொல்லி
முடிக்க வேண்டும் !
விதியென்னும் புதைகுழியில்
வீழாமல் என்
……..விருப்பம்போல் கடைசிவரை
வாழ வேண்டும்!
அதிசயமாய் நான்மட்டும் சுவாசம்
செய்ய
……..ஆக்ஸிஜனும் எனக்குள்ளே
சுரக்க வேண்டும் !
கல்லறையில் எனைக்கொண்டு
வைத்த பின்னும்
……..கரையான்கள் அரிக்காத மேனி
வேண்டும் !
சில்லறையாய் எனதுஉடல்
சிதையும் போதும்
……..சிரிக்கின்ற திடமான உள்ளம்
வேண்டும்!
சல்லடையில் வார்த்தைகளைச்
சலித்தெடுத்து
……..சரித்திரங்ள் படைக்கவரும்
சொற்கள் வேண்டும் !
செல்லரித்து நாவில்சீழ் வடியும்
போதும்
……..சத்தியத்தைத் தவறாத வாக்கு
வேண்டும் !
கீச்சென்ற ஒருசொல்லால் பேசும்
அந்த
……..கிளியுடைய தாய்மொழியை
ரசிக்க வேண்டும் !
பூச்சரமாய் நிற்கின்ற பெண்ணை
அள்ளி
……..பூலோகம் அழியும்வரை
ருசிக்க வேண்டும் !
மூச்சற்றுப் போனாலும் மூளைச்
செல்லில்
……..முணுமுணுப்பாய்
கவிதைவரி ஒலிக்க வேண்டும் !
பேச்சற்றுக் கிடக்கின்ற நிலவும்
எந்தன்
……..பெயர்சொன்ன பின்னால்தான்
உதிக்க வேண்டும் !
பனித்துளிக்குள் எப்படியோ
நுழைந்து சென்று
……..பத்திரமாய் ஓரிரவு உறங்க
வேண்டும் !
தனிமையிலே எனைப்பர்த்துக்
காதல் செய்ய
……..தேவதையும் எனைத்தேடி
வருதல் வேண்டும் !
பனிக்கொட்டும் மாதத்தில்
குளிர்தணிக்க
……..பாய்விரித்துச் சூரியனில்
படுக்க வேண்டும் !
இனியெந்தன் இரைப்பையில் தீயை
அள்ளி
……..இறைத்தாலும் அதைஉண்டும்
செரிக்க வேண்டும் !
விரல்நீட்டித் தொடுகின்ற
தொலைவில் இங்கே
……..விண்மீன்கள் பூக்களாக
முளைக்க வேண்டும் !
இரவெல்லாம் மீண்டுமிங்கு
விடிவதற்கு
……..என்னிடத்தில் உத்தரவு கேட்க
வேண்டும் !
சிரமத்தைப் பாராமல் செவ்வாய்க்
கோளும்
……..எனைபார்க்க கீழிறங்கி வருதல்
வேண்டும் !
நிரந்தரமாய் என்கவிதை இனிக்கும்
என்றால்
……..நடுக்கடலில் இட்டவிதை
முளைக்க வேண்டும் !
மழைநீரில் தினம்நனைத்து
இயற்கையோடு
……..மணிக்கணக்காய் உறவாடி
கரைய வேண்டும் !
அழைக்காமல் என்னருகில் எமனும்
வந்தால்
……..அதையும்நான் கண்டிக்கும்
உரிமை வேண்டும் !
பிழைசெய்யா பருவத்தில் தாயின்
மார்பில்
……..பிள்ளையென பால்குடித்த
காலம் வேண்டும் !
உழைக்காமல் என்தேகம் இருந்தால்
எந்தன்
……..உயிரெடுத்து சிலுவையிலே
அறைய வேண்டும் !
தன்னிச்சை செயலாக உண்மை பேச
……..தனிநாக்கு எப்போதும்
எனக்குள் வேண்டும் !
என்கண்ணில் சூரியனை வைத்துக்
கொண்டு
……..எனைச்சுற்றி பூமிவர செய்தல்
வேண்டும் !
மின்னல்களில் மையூற்றி
பேனாவாக்கி
……..மின்சாரம் போல்கவிதை எழுத
வேண்டும் !
என்னுள்ளே தமிழ்ஞானம் அழியும்
என்றால்
……..அப்பொழுது அந்நொடியே
மரணம் வேண்டும் !
யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, July 14, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment